×

ஆணவக்கொலை செய்து இளம்பெண் உடல் எரிப்பு தற்கொலை நாடகமாடி இழப்பீடு வாங்கிய உறவினர்கள் 6 பேர் கைது: கள்ளத்தொடர்பால் ஆத்திரம்

கமுதி: கமுதி அருகே கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை ஆணவக்கொலை செய்து உடலை எரித்து விட்டு தற்கொலை நாடகமாடி அரசிடம் இழப்பீடு வாங்கிய உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே டி.வல்லக்குளத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் ராதிகா (22), பார்த்திபனூர் அருகே பிச்சப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (30) ஆகியோரின் திருமணம் 2 ஆண்டுக்கு முன்பு நடந்தது.  குழந்தை இல்லை. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு ஒரு வருடத்திற்கு முன்பு ராதிகா பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.இந்நிலையில், இதே ஊரை சேர்ந்த கருப்பசாமி (22) என்பவருடன் ராதிகாவிற்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த பெற்றோர், ராதிகாவை கண்டித்தனர். இருப்பினும் ராதிகா, அடிக்கடி கருப்பசாமியை தனிமையில் சந்தித்து  உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப். 29ல் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளதை ராதிகாவின் உறவினர்கள் பார்த்துவிட்டதால், கருப்பசாமியை சரமாரியாக தாக்கினர்.இதற்கிடையே, திடீரென ராதிகா மாயமானார். அவரது உடல்  ஊருக்கு வெளியே ஏப். 30ம் தேதி எரிந்த நிலையில் கிடந்தது. அருகில் கிடந்த கடிதத்தை அபிராமம் போலீசார் கைப்பற்றினர். அதில், தற்கொலை செய்து கொள்வதாக ராதிகா குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தற்கொலை வழக்காக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். ராதிகாவின் உறவினர்கள் போலீசில் கொடுத்த புகாரில், ‘கள்ளக்காதலன் கருப்பசாமி அடித்து கொன்று எரித்துவிட்டதாக’ தெரிவித்தனர்.கொலையாளியை கைது செய்யக் கோரியும், இழப்பீடு வழங்கக் கோரியும் உடலை வாங்க மறுத்து ராதிகாவின் உறவினர்கள் ஒரு வாரம் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அரசு ₹4 லட்சத்து 12 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்கியதை  தொடர்ந்து உடலை பெற்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராதிகாவை அவரது உறவினர்களே ஆணவக்கொலை செய்திருக்கும் விஷயம் அம்பலமாகியிருக்கிறது. கவுரவக் கொலை செய்ததாக அவரது உறவினர்கள் முருகன் (24), அழகர்சாமி  (23), மோகன் (20), முனியசாமி (40), பாப்பா (50) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை அபிராமம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், ‘‘ராதிகாவின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்ட 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தோம். அப்போது, உண்மை தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவருடன் ராதிகா  கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்ய உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர். உருட்டு கட்டையால் அடித்து கொன்று உடலை வீட்டில் மறைத்துள்ளனர். ராதிகா எழுதியது போன்று 17 வயது சிறுவனை வைத்து கடிதம் எழுதியுள்ளனர்.  ராதிகாவை அவரது தாய் கஸ்தூரி தேடியதை அறிந்து, முருகன், அழகர்சாமி, மோகன், பாப்பா மற்றும் சிறுவன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து இரவில் உடலை எடுத்து ஊருக்கு வெளியே போட்டு தீவைத்து எரித்துள்ளனர்’’ என்றனர்.இந்தச் சம்பவம் கமுதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : persons ,bodybuilding suicide , Suicide ,Dramatic, arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...