நீலகிரி கோடை விழா குன்னூர் பழ கண்காட்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் தொடர்ச்சியாக குன்னூரில் நேற்று துவங்கிய பழக்கண்காட்சியை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கண்காட்சி இன்று 2வது நாளாக நடக்கிறது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழா நடக்கிறது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் காரணமாக கோடை விழாவில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி ரத்து  செய்யப்பட்டன. ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் குன்னூர் பழக் கண்காட்சி ஆகிய இரண்டை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 17ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கி தொடர்ந்து 5  நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக் கண்காட்சி நேற்று துவங்கியது.

இதில் 1.50 டன் பழங்களை கொண்டு வண்ணத்துப்பூச்சி, மயில், மாட்டுவண்டி மற்றும் விவசாய தம்பதி உருவம் மற்றும்  ரங்கோலி போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி தோட்டக்கலை துறையின் சார்பில் நீலகிரியில் விளையும் பழங்களான ஊசிப்பழம், தவிட்டுப்பழம், விக்கி, பிளம்ஸ், பீச், பேரி, மங்குஸ்தான், ஸ்ட்ராபெர்ரி லிச்சீஸ், ஆரஞ்ச் உட்பட அரிய  வகை பழங்கள், சமவெளி பகுதிகளின் பழங்கள் கண்காட்சி அரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை அரங்குகள், தனியார் பழ விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.  கண்காட்சியை நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இன்று 2வது நாளாக நடந்து வரும் கண்காட்சியை ஆயிரக்கணக்கான பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Related Stories: