கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அமோக வெற்றி: வசந்தகுமார் எம்.பி. $6 ஆயிரம் தருவதாக வதந்தி பரப்பும் கும்பலை கைது செய்ய வேண்டும்...எஸ்.பி அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் எம்.பி. ரூ.6 ஆயிரம் பணம் தருவதாக வதந்தி பரப்பும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 67 ஆயிரத்து 302 வாக்குகள் மட்டுமே ெபற்றார். வசந்தகுமார் வெற்றியால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில், வசந்த் அன் கோ நிறுவனத்தில் வசந்தகுமார் மாதம் ரூ.6 ஆயிரம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வழங்க உள்ளார். எனவே அனைவரும் அருகில் உள்ள வசந்த் அன் கோ நிறுவனத்துக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுங்கள் என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாலை குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர், வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  வசந்தகுமார் எம்.பி.யாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளமான ஹலோ சாட்டில் கீன்சாட் என்ற புரொபைலில், வசந்தகுமார் எம்.பி அதிரடி. மாதம் ரூ.6ஆயிரம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வசந்த் அன்கோவில்  வழங்கப்படுகிறது.  ஆதார் எண் கொடுத்து, உடனடியாக அருகில் உள்ள வசந்த் அன்கோ கிளையை அணுகவும் என்று வசந்தகுமாரின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் தவறான தகவலை சிலர் பரப்பி வருகிறார்கள். இந்த வதந்தியை பரப்பிய விஷமியின் குற்றகர செய்கையால் காங்கிரஸ் கட்சிக்கும், வசந்தகுமாரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.  எனவே தகுந்த விசாரணை நடத்தி, வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்து உள்ளோம் என்றார். காங்கிரஸ் நிர்வாகிகள் மகேஷ் லாசர், வைகுண்டதாஸ், ஜெகன், கிறிஸ்டி ரமணி, சாந்தி ரோஸ்லின், அந்தோணிமுத்து, சகாய ஆனந்த் உள்பட பலர் உடன் வந்து இருந்தனர்.

Related Stories: