×

மின்தடையை கண்டித்து மறியல்: மதுரையில் நள்ளிரவு பரபரப்பு

மதுரை: மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாகத்மாகாந்தி நகர் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட மீனாம்பாள்புரம், எஸ்.ஆலங்குளம், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக இரவு நேரங்களில்  மின்விநியோகத்தில் தடை ஏற்படுகிறது. இரவு 9 மணிக்கு ஏற்படும் மின்தடை, நள்ளிரவிலோ, அல்லது அதிகாலையிலோ தான் மீண்டும் சீராகிறது. இதனால் அப்பகுதிமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதிமக்கள் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், மின்தடையை கண்டித்து, நேற்றிரவு 9 மணியளவில் எஸ்.ஆலங்குளம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர்கள் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நள்ளிரவு 11.30 மணி வரையிலும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Madurai , Resistance, stir, Madurai
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...