சென்னை: செங்குன்றம் காந்தி நகர், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே கனரா வங்கி மற்றும் தனியார் வங்கியின் 2 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இங்கு பாதுகாப்புக்காக காவலர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் இந்த மையங்களின் உள்ளே புகுந்து ஏடிஎம் மெஷின்களை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலித்ததால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுபற்றி வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வங்கிகள் சார்பில் செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் சோழவரம் காவல் நிலைய எல்லையில் வருகிறது என கூறி போலீசார் அலைக்கழித்து உள்ளனர்.
இதை தொடர்ந்து ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு சோழவரம் போலீசில் வங்கி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். அதன்படி சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.