லண்டன்: இந்திய அணியுடனான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் தலா 2 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே கே.எல்.ராகுல் 6 ரன் எடுத்து போல்ட் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கேப்டன் விராத் கோஹ்லி 18 ரன் எடுத்து கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்திக் பாண்டியா 30 ரன்னில் (37 பந்து, 6 பவுண்டரி) வெளியேற, தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய டோனி 17 ரன் எடுத்து (42 பந்து, 1 பவுண்டரி) சவுத்தீ வேகத்தில் நீஷம் வசம் பிடிபட, இந்தியா 22.3 ஓவரில் 91 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. புவனேஷ்வர் குமார் 17 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா - குல்தீப் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது. ஜடேஜா 54 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குல்தீப் 19 ரன் (36 பந்து, 2 பவுண்டரி) எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 39.2 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.