நாகர்கோவில்: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு ஜூன் 2 வது வாரத்தில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளி கல்வி பாட திட்டத்தை 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் மாற்றியமைக்கும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த கல்வியாண்டு தொடக்கத்தில் முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அந்தந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகள் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்கி நடத்தப்பட்டது. 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அப்போது பயிற்சி அளிக்கப்பட்டது. பகுதி வாரியாக மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.