தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் மூன்று மலைப்பாதைகள் உள்ளன. இந்த குமுளி, போடி, கம்பம் மெட்டு மலைப்பாதைகள் வழியே தினந்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் செல்கின்றன. இவை தவிர தேவாரம், கோம்பை, கம்பம் வழியே ஒற்றையடி மலைப்பாதைகளும் அடர்ந்த காடுகளுக்குள் செல்கின்றன. இவ்வழியே தினந்தோறும் ரேஷனில் இலவசமாக மக்களுக்கு தரப்படும் அரிசி சரக்கு லாரிகள், மாட்டு வண்டிகள், ஜீப்களில் கடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதிலும் 60க்கும் மேற்பட்ட மில்கள் செயல்படுகின்றன. இந்த மில்களில் ரேஷனில் தரப்படும் அரிசியை மாவாக அரைத்து மாடுகளுக்கு தீவனமாக விற்பனை செய்வதும் நடக்கிறது. இதுதவிர மாவட்டத்தில் அவ்வப்போது ரேஷன் அரிசி கொண்டு செல்கிறார்கள் என பிடிக்கப்படும் நபர்களிடமும் பேரம் பேசி கறப்பதும் நடக்கிறது. ரேஷன் கடைகளில் மாத மாமூல், வீட்டு உபயோக சிலிண்டர்களை பிடித்து வசூல், தலைச்சுமை, கால்சுமையாக கொண்டு செல்பவர்களிடம்.. என வசூலோ.. வசூல் சொல்லமுடியாத அளவிற்கு செல்கிறது.