×

எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம் மக்களின் நலன் காக்கும் திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம் என்றும், மக்களின் நலன்காக்கும் திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க-நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மனமுவந்து வழங்கி இருக்கிறார்கள். தனது மாநிலத்திற்குள் பாஜக நுழைய முடியாதபடி தடுத்து, நிறுத்திய ஒரு மாநிலக் கட்சி தலைவர் ஸ்டாலின் மட்டும் தான் என்று ஆங்கில ஊடகங்கள்-அரசியல் நோக்கர்கள் என அனைத்துத் தரப்பிலும் இதே கருத்து எங்கணும் எதிரொலிக்கிறது. திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும் எத்தனை பேர் குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு. தமிழகம்-புதுச்சேரியில் திமுக கூட்டணியும் 38 மக்களவை தொகுதிகளை வென்றிருக்கிறது. 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் திமுக பெறுகிறது. 1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது. சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101 ஆக உயர்கிறது.

அதிமுக வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் திமுக கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும். இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும்-அரசியல் எதிரிகளும், ‘திமுகவின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்கு தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். மக்கள் நம் மீது அசையா நம்பிக்கை வைத்து அளித்துள்ள இந்த மகத்தான வெற்றிகளுக்காகச் சூட்டப்படும் புகழ் மாலைகள் அனைத்தும், நம்மை நாளும் வளர்த்தெடுத்து-நல்ல வழிகாட்டி-குறைவின்றி நெறிப்படுத்திய தலைவர் கலைஞருக்கு உரியவை. அவரிடம் நான் கற்றுக்கொண்டது, உழைப்பு, ஓயாத உழைப்பு. அதனால் தான் தலைவர் கலைஞம், “ஸ்டாலின் என்றால் உழைப்பு. உழைப்பு. உழைப்பு..” என்று மகிழ்ந்து பாராட்டினார். அதனைவிட பெரிய பதவியோ பட்டமோ வேறேதும் இருக்க முடியாது. தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகவும்-திமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும்-வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு திமுகவை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடி தான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

பொய் நெல்லைக் குத்தி, புரளிச் சோறு பொங்க நினைத்தவர்களை, வாக்கு எனும் அகப்பைக்கரண்டியால் வாக்காளர்கள் துரத்தியடித்திருக்கிறார்கள். என்றும் தங்கள் நம்பிக்கைக்குரிய இயக்கம்-எப்போதும் நம்பிக்கையைக் காப்பாற்றும் இயக்கம் திமுக தான் என்பதை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வைத்து நிரூபித்திருக்கிறார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களின் கூட்டணியை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எதிர்கொண்டு, மதநல்லிணக்கம்-சமூகநீதி- அனைவர்க்குமான வளம், நலன் ஆகிய கொள்கைகளில் உறுதியுடன் நின்று, மக்களை மட்டுமே நம்பி அவர்களின் நல்லெண்ணத்தைச் சார்ந்து நமது கூட்டணியின் இலட்சியப் பயணம் தொடர்ந்தது. மத்திய-மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர்.

மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப் பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்கு சாத்தியமாகியிருக்காது. ஆட்சியாளர்களின் அதிகார வரம்புமீறல்களை எதிர்கொண்டு, சரியான-தெளிவான-உறுதியான வியூகத்தை வகுத்து, அதனைக் கிஞ்சிற்றும் பிசகாமல் களத்தில் செயல்படுத்திய கட்சியிரும் தோழமைக் கட்சியினரும் இந்த வெற்றியின் முக்கிய பங்குதாரர்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன்பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை! தலைவர் கலைஞரின் தலைவர் அண்ணா, அண்ணாவின் தலைவர் தந்தை பெரியார் என திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களின் நினைவிடங்களில் வணக்கம் செலுத்தி, திமுக கூட்டணிக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றியை காணிக்கையாக்கியிருக்கிறேன்.

தேர்தல் களத்தின் வெற்றியுடன் நிறைவு கொள்பவர்கள் நாமல்ல. நம்மை அப்படி தலைவர் கலைஞர் உருவாக்கவும் இல்லை. எதற்காக இந்த வெற்றியை தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினை பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே என கொண்டு, நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக்குரலாக திமுக ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கைத் தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும் - பறிபோனவற்றை மீட்டெடுக்கவும்-ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும். மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட திமுக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. அண்ணா, தலைவர் கலைஞர் கண்ட இனம்-மொழிக்கான கனவு நனவாகும் காலம் நெருங்கி வருகிறது. பெரியார்- அண்ணா-தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.கழகத்தின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dravida Munnar ,volunteers ,MK Stalin , Dravidian Movement, People's Welfare, DMK, MK Stalin's Letter
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...