ஜாக்ேடா ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும்

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது பிடித்தம் செய்து வைக்கப்பட்ட சம்பளத்தை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் கூறினர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த முத்துசாமி, நிர்வாகிகள் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடிகளுடன் இணைக்காமல் தொடக்க பள்ளிகளில் இணைக்க வேண்டும். தொடக்கக் கல்விக்கான முழு அதிகாரம் பெற்ற அமைப்பாக தொடக்க கல்வி இயக்ககம் செயல்பட அனுமதிக்க வேண்டும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதற்கு  விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்கென தனி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வியில் படிக்க  அதிகம் பேர் விரும்புவதால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில பிரிவுகளில் வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுகிறதா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால், பிடித்தம் செய்த சம்பளத்தை அரசு உடனடியாக ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த முத்துசாமி கூறினார்.

Related Stories: