சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இலவச நெட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு மே 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள், மாநிலங்களில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இளநிலை ஆராய்ச்சியாளர் இடங்களில் சேர நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் 2 முறை நெட் தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நெட் தேர்வு நடைபெறுகிறது. நெட் தேர்வுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த எஸ்சி/எஸ்டி/ஓபிசி மற்றும் சிறுபாண்மையினருக்கு(கிரிமி லேயர் வரம்புக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள்) சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஜூன் 7ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பிக்க விரும்புவோர் மே 30ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இயக்குனர், யுனிவர்சிட்டி ஸ்டூடன்ட் அட்வைசரி பிரோ, சேப்பாக்கம் வளாகம், சென்னை பல்கலைக்கழகம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை 044-2359 9518 என்ற தொலைப்பேசி எண்ணில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.