×

பேராசையால் விஷமாகும் ‘முதல் கனி’ கார்பைடு மாம்பழம் உஷாரு... சாப்பிட்டா ஆயிடும் பேஜாரு...

* உடல் உபாதைகளால் மக்கள் கடும் அவதி n உணவு பாதுகாப்புத்துறை காட்டுமா அதிரடி?

கம்பம்: தென்மாவட்டங்களில் விற்பனைக்கு வரும் மாம்பழங்கள் பெரும்பாலானவை கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன. இதை வாங்கி சாப்பிடும் மக்கள் பலவித தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். முக்கனிகளில் முதல் கனி என அழைக்கப்படுவது மாம்பழம். பழங்களிலேயே அதிக ரகத்துடன் விளையும் மாம்பழங்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை எனலாம். கோடைக்காலத்தில் இதன் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், ஒரு சில வியாபாரிகள், பேராசை காரணமாக கார்பைடு கல் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்பதால் பலர் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். உலகிலேயே அதிக அளவு மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. நாட்டின் மொத்த மா சாகுபடி பரப்பளவில் தமிழகத்தின் பங்களிப்பு 4.5 சதவீதம் என்றளவில் உள்ளது.

தட்பவெட்ப மாறுதல்களைத் தாங்கி வளரக்கூடிய மாம்பழம், பழச்சாறு, ஊறுகாய் போன்ற பல வகை உணவுப்பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது. தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணைகளில் சுமார் 42 வகையான மாம்பழக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. சேலம் கருமந்துறையில் உள்ள பாரம்பரிய மாம்பழ வகை பாதுகாப்பு மையத்தில் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் மாமரக்கன்றுகள் விற்கப்படுகின்றன. தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், வேலூர், திருவள்ளூர், தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மாம்பழம் விளைகிறது. இங்கு நீலம், தோத்தாபுரி (பெங்களூரா, கிளிமூக்கு), பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, ருமானி, சப்பட்டா, இமாம்பசந், காலப்பாடு, உட்பட 40 வகையான மாம்பழங்கள்  விளைவிக்கப்படுகின்றன. தற்போது மாம்பழ அறுவடை சீசன் நடப்பதால் மாம்பழங்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அனைத்து பழக்கடைகளிலும் வகை, வகையான மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் வகை வகையான இந்த மாம்பழங்களை மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் இவை இயற்கையாக பழுத்தது தானா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அறுவடைக்குப் பின் மாங்காய் இயற்கையாக பழுக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஆனால் மாங்காய்களை விரைவாக பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சில வியாபாரிகள் கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கின்றனர். இந்த கார்பைடு கல் வைத்தால் சுமார் ஆறு மணிநேரத்தில் காய்கள் பழுத்துவிடும். இப்போதெல்லாம் நமக்கு பொறுமை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இந்தப்பழங்களை வாங்கி உண்ணும் மக்களின் உடல் நலத்தை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

எப்படி பழுக்க வைப்பது? இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி இது தடை செய்யப்பட்ட முறையாகும். வெல்டிங் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு கல்லை சிறு துண்டுகளாக உடைத்து
காகிதத்திலோ, பிளாஸ்டிக் பையிலோ சுற்றி மாங்காய்களுக்கு நடுவே வைக்கிறார்கள். இந்த கால்சியம் கார்பைடில் இருந்து அசட்டலின் என்ற வாயு வெளியாகி மாம்பழத்தை பழுக்க வைக்கிறது. மாம்பழத்தின் நிறத்தை அது மாற்றும். தன்மையை கெடுத்துவிடும். அடுத்த மூன்று முதல் ஆறு மணிநேரத்தில் மாங்காய்கள் அனைத்தும் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதுதான் செயற்கை கல் மூலம் பழுக்க வைக்கும் முறை. இப்படி பழுக்க வைத்த பழங்களை அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட தமிழகத்தில் வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் டன் கணக்கில் கல் வைத்து செயற்கையாக பழுக்கவைத்த மாம்பழங்களை
பறிமுதல் செய்து அழித்தனர். சுவை இருக்காது: கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்ணை சுண்டியிழுக்கும் வகையில் இருந்தாலும் சுவை இருக்காது. இந்த மாம்பழத்தை சாப்பிட்டால் முதலில் வயிற்று வலி உண்டாகும். தொடர்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படும். வேதியியல் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

கண்டுபிடிப்பது எப்படி?

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை மக்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மாம்பழங்களின் மீது கறுப்பு புள்ளிகள் இருக்கும். மாம்பழங்களை தொட்டு பார்த்தால் சூடாக இருக்கும். தோல் மட்டும் பழுத்ததுபோல மஞ்சளாக இருக்கும். உள்ளே வெட்டி பார்த்தால் பழுத்திருக்காது. சுவையும் இருக்காது. மேலும், கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் ஓரு சில நாட்களில் கெட்டு போய்விடும். இயற்கையாக பழுத்த பழங்களில் கடைசியாகத்தான் காம்புப்பகுதி பழுக்கும். கல் வைத்து பழுத்த பழம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருக்கும். இப்படியும் பழுக்க வைக்கலாமே! முன்பெல்லாம் புகை மூட்டம் போட்டு மாங்காய்களை பழுக்க வைத்த மாம்பழ வியாபாரிகளுக்கு, இப்பொழுது பொறுமை இல்லை என்பதால் எத்திலின் திரவத்தை, மாங்காய்களில் தெளித்து அவைகளை பழுக்க வைக்கும் முறையை இந்திய உணவு பாதுகாப்பு அனுமதித்துள்ளது. அதாவது மாமரத்தில் சுரக்கும் எத்திலின் என்ற ஹார்மோன் மூலம் தான் மாம்பழங்கள் மரத்தில் இயற்கையாக பழுக்கின்றன. எனவே, அதே எத்திலின் திரவத்தை மாங்காய்களில் தெளித்து அவற்றை செயற்கையாக பழுக்க வைக்கும் முறை இது.

இந்த முறைப்படி 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி. எத்திலின் திரவத்தை கலந்து அதனை மாங்காய்கள் மீது தெளித்து, அறையில் வைத்து பூட்டி வைக்கப்படும். அதில் இருந்து எத்தலின் வாயு வெளியேறி மாம்பழங்களை இயற்கையான முறையில்
பழுக்க வைத்துவிடும் (புகை மூட்டம் போட்டு பழுக்க வைப்பது போன்று). ஆனால், இந்த முறையில் மாம்பழங்கள் பழுக்க நான்கு நாட்கள் வரை ஆகும். இந்த முறையில் மாங்காய்களின் நிறம் மாறுவதுடன், சுவை அப்படியே இருக்கும். உடல் நலத்திற்கு எந்த தீங்கையும் விளைவிக்காது. இவ்வாறு பழுக்கவைக்க நான்கு நாட்கள் வரை ஆகும் என்பதால், சில வியாபாரிகள் இதை பின்பற்றுவதில்லை. இதுகுறித்து விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வைட்டமின் ஏ’’ சத்து நிறைந்த மாம்பழம் பழ வகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இயற்கையாக பழுத்த மாம்பழத்தைப்போல, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் அனுமதித்துள்ள எத்திலின் திரவத்தை தெளித்து பழுக்கவைக்கும் மாம்பழம் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதில்லை. கார்பைடு கல் வைத்த மாம்பழம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்புண் ஏற்படும். அதனால் பொதுமக்களும் கல் வைத்த மாமபழத்தை கண்டறிந்து வாங்காமல் ஒதுக்கி விட வேண்டும்.

மேலும், மக்களின் உடல் நலத்தை பற்றி கவலைப்படாமல், கார்பைடு கல் மூலம் மாங்காய்களை பழுக்க வைத்து விற்பனை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Ushuru , Greed, poison, mango
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...