×

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பலாத்கார விவகாரம் திருநாவுக்கரசு உள்பட 5 பேரும் திட்டமிட்டு நடத்திய கூட்டு சதி: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கோவை கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரும் திட்டமிட்ட கூட்டு சதியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு(27), சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), மணிவண்ணன் (26) ஆகிய 5 பேர்  கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சிபிஐ அதிகாரிகள், பொள்ளாச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். பாலியல் பலாத்கார வழக்கில்  சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனையும் நடந்தது.  முதலில் திருநாவுக்கரசு வீடு மற்றும் குற்றம் நடந்த பண்ணை வீட்டில் சோதனை நடந்தது. பின்னர், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 4 பேர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களின் வீடுகள் அருகே  வசித்தவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்கள் சேகரித்தனர்.  
சிபிஐ கூடுதல் எஸ்.பி. கலைமணி, இன்ஸ்பெக்டர் விஜய வைஷ்ணவி ஆகியோர் விசாரித்தனர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிபிஐ போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். இதையடுத்து, திருநாவுக்கரசு உட்பட 5 பேர்  மீதும் கோவை சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி நாகராஜனிடம் நேற்று முன்தினம் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

 இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறியதாவது: ஒரு வழக்கில் குற்றம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே தற்போது முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் திட்டமிட்டு கூட்டு சதியில்  ஈடுபட்டிருப்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது.  சபரிராஜன் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்துள்ளார். திருநாவுக்கரசும், வசந்தகுமாரும் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்தனர். சதீஷ் துணிக்கடை  உரிமையாளராக இருந்தார். மணிவண்ணன் தொழில் செய்து வந்தார். இவர்கள் 5 பேரும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம், வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம், வன்கொடுமையை ஒருவர் செய்ய மற்றவர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதுபற்றி பெற்றோரிடமோ,  உறவினர்களிடமோ கூறக்கூடாது. போலீசில் புகார் செய்யக்கூடாது என்று அந்த பெண்களை எச்சரித்துள்ளனர். தாங்கள் எடுத்த ஆபாச படங்களை காட்டியும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறியும் அந்த இளம்பெண்களை  மிரட்டியுள்ளனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுப்பதற்கு முன்பும், அந்த குற்றம் நடந்த பின்னரும் ஒருவருக்கொருவர் செல்போனில் தொடர்பு கொண்டபடி இருந்துள்ளனர். இந்த வழக்குக்கு தேைவயான அனைத்து தகவல்களையும், ஆவணங்களையும் சேகரித்து குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளோம். இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் கூறினர்.பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுப்பதற்கு முன்பும், அந்த குற்றம் நடந்த பின்னரும் ஒருவருக்கொருவர் செல்போனில் தொடர்பு கொண்டபடி இருந்துள்ளனர்

Tags : Pillaiyacai ,gang rape ,Tirunavukarasu , Young women, Pollachi ,Thirunavukarasu,
× RELATED விபத்தில் சிக்கிய மின் ஊழியர் பலி