ஆட்சியமைக்க உரிமை கோரியதை தொடர்ந்து மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு

புதுடெல்லி: டெல்லி ராஜபவனில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம்  டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு  மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதிவிக்கு நரேந்திர மோடியை முதலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்மொழிந்தார். தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் , சிவசேனா தலைவர் உத்தல் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அனைவரும் இன்று  மாலைக்குள் டெல்லி வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரக்குமார், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்தவுடன், டெல்லி ராஜபவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோரினார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றிப்பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடித்தை அடித்து, ஆட்சியமைக்க கோரினார். தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். ஆனால், பிரதமர் மோடி வரும் 30ம் தேதி மீண்டும் பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி பேட்டி:

ராஜபவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோரிய பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரதமர் மோடி, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றி என்றார். தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியல் விரைவில் குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும், புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை விரைவில் செயல்படுத்தும், அனைத்து மாநில வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார். அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களைத் தொடுவோம், நன்றி என சொல்லி மோடி சென்றார்.

Related Stories: