டெல்லி: ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக தெரிவித்ததை செயற்குழு நிராகரித்துவிட்டது என காங்கரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. ஓரிரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் ராகுல் போட்டியிட்ட அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியடைந்தார்.
வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இந்த கூட்டத்திற்கு ராகுல்காந்தி தலைமை வகித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம் பஞ்சாப் மாநில முதல்வர் அமிரீந்தர் சிங் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்து கடிதம் அளித்ததார். ஆனால் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவினர் மறுப்பு தெரிவித்தனர். மேலும் ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர விருப்பம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் காரிய கமிட்டி குழு உறுப்பினர்கள் பேட்டி:
காங்கிரஸ் காரிய கமிட்டி குழு ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குழு உறுப்பினர்கள், கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக செயற்குழுவில் ராகுல் தெரிவித்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து விதமான முடிவுகளை எடுக்கவும் ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றனர். நாட்டு மக்களின் முடிவை காங்கிரஸ் ஏற்கிறது; காங்கிரஸ் ஆக்கப்பூர்வமான எதிரிக்கட்சியாக தனது பணியை செய்யும் என்றனர். காங்கிரஸ் கூட்டணிக்கு 12கோடியை 13 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்றும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர். விவசாயிகள் நிலை மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.