டெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றனர். வரும் 30ந் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் வழங்கப்பட உள்ள பிரதிநிதித்துவம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி புறப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமாரும் உடன் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து மூன்று பேரும் ஒரே விமானத்தில் டெல்லி புறப்பட்டனர்.