துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 195வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகர் அருகே எழில் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களுக்காக, கடந்த 5 ஆண்டுக்கு முன், தமிழக அரசு சார்பில் ₹11 லட்சம் மதிப்பீட்டில் நடுநிலைப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் தனியார் நிறுவனம் மூலம் ₹4 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவ மாணவியர் பயின்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் அதே பகுதியில் புதிய கட்டிடத்துக்கு பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. இதனால், பழைய பள்ளி கட்டிடம் கடந்த ஓராண்டாக மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. தற்போது, பள்ளி நுழைவாயிலில் உள்ள கதவின் பூட்டை உடைத்து சிலர் மது அருந்துதல், கஞ்சா அடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.