மம்தா இன்று அவசர கூட்டம்

கொல்கத்தா: மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், அவசரக் கூட்டத்தில் பங்கேற்க எம்பிக்கள், தலைவர்களுக்கு கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 34 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த தேர்தலில், 22 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதே நேரத்தில் கடந்த  தேர்தலில் 2 இடங்களை பிடித்த பாஜ இந்த முறை 18 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது..

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக எம்பிக்கள், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், “இந்த கூட்டத்தில் தேர்தல்  முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படும். அதே நேரத்தில் எங்களது பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆராயப்படும். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்களுக்கு எதிரான இந்த கட்டளையை நாங்கள்  எதிர்பார்க்கவில்லை. தவறுகளை திருத்திக்கொள்வது அவசியமாகும்” என்றார்.

Related Stories: