சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வர் ஆவதற்கு தமிழக மக்கள் வெற்றியை அளித்துள்ளனர் என சமத்துவ மக்கள் கழகத்தலைவர் ஏ.நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
கலைஞரிடம் கற்ற அரசியல் பாடங்களை வெகு நேர்த்தியாக செயல்படுத்தி தமிழகத்தில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி இந்தியாவில் தமிழகத்தை உற்றுநோக்க வைத்த மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் முதல்வர் பதவியில் அமருவதற்கு தமிழக மக்கள் மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மக்கள் தேசிய கட்சி: மக்கள் தேசிய கட்சி தலைவரும், முன்னாள் வாரிய தலைவருமான சேம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் அதிமுக-பாஜ கூட்டணி மீது வெறுப்பை வைத்ததை விட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளனர். இந்த வெற்றிக்கு அவர் இடைவிடாமல் செய்த சூறாவளி பிரசாரம்தான் முழு முதல் காரணம். அவர் தலைமையில் தமிழகத்தில் விரைவில் திமுக நல்லாட்சி அமையும்’’ என்று கூறியுள்ளார்.