கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே விவசாயிகள் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்தில் தென்பள்ளிப்பட்டு, பத்தியவாடி, பில்லூர், பொன்னாந்தாங்கல், நார்த்தாம்பூண்டி, சிறுகிளாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், விவசாய நிலங்களை அளந்து குறியீடு கல் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குறியீட்டு கற்களை தூக்கி எறிந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.