வேலூர்: தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் உணவுப்பொருட்களில் நூறு சதவீதத்திற்கு அதிகமாக தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் கலப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இதனை ஆய்வு செய்யும் பணிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வீதிகள்தோறும் சிற்றுண்டிகளும், உணவகங்களும் புற்றீசல் போல் முளைத்துள்ளன. இதில் பெரும்பாலான ஓட்டல்களில் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு உணவுப்பொருட்களில் கலப்படம் தரமற்ற உணவு வகைகள் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சில்லி சிக்கன், கிரில் சிக்கன் போன்றவற்றில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட நிறமூட்டிகள் கலக்கப்படுகிறது. பிரியாணியில் 3 வகையான நிறமூட்டிகளும், சால்னாவிலும் தடைசெய்யப்பட்ட நிறமூட்டிகள் கலந்து தயாரிக்கப்படுவதாக புகார்கள் உள்ளது. இதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உடலுக்கு கேடு விளைவிக்கும் நிறமூட்டிகள் உணவில் அதிகளவில் கலக்கப்படுவதை தடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து வகையான ஓட்டல்களில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.