குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி இன்று துவங்குகிறது. இரண்டு நாள் நடக்கும் கண்காட்சிக்கென 1.5 டன் பழங்களில் சிறப்பு உருவங்கள் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடக்கிறது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் காரணமாக கோடை விழாவில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி,ரோஜா கண்காட்சி, படகு போட்டி போன்றவற்றை ரத்து செய்யப்பட்டன. எனினும் ஊட்டி மலர் கண்காட்சி மற்றும் குன்னூர் பழக் கண்காட்சி ஆகிய இரண்டை மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 17ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கி 5 நாள் நடந்தது. மலர் கண்காட்சியை சுமார் 1.50 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுரசித்தனர். இந்நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த கண்காட்சியை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைக்கிறார். பழக் கண்காட்சியை முன்னிட்டு 3 மாதங்களுக்கு முன்பே பல லட்சம் மலர்ச் செடிகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டன.