சென்னை: தமிழகத்தில் பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தோல்வி அடைந்துவிட்டதா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர்களும் சரி, பொதுமக்களும் சரி ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபராகத்தான் டிடிவி.தினகரனின் நிலை இருக்கிறது. அது இப்போது நன்றாக தெரிந்து விட்டது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைத்து, ஜெயலலிதா செய்த திட்டங்களையெல்லாம் மக்களிடம் எடுத்து சொன்னோம். ஆனால், ஒரு தவறான பிரசாரம் அது கதிராமங்கலம் ஆனாலும் சரி, மீத்தேன் எரிவாயு என்றாலும் சரி, நீட் ஆனாலும் சரி, ஜிஎஸ்டி என எல்லாமே அதிமுகதான் காரணம் என்று பிரசாரம் செய்யப்பட்டது. அந்த பிரசாரம் தற்காலிகமாக எடுபட்டு விட்டது.