மக்களவை தேர்தலில் வென்ற திமுகவினர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

சென்னை: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்தனர். தேர்தல் முவுவுகள் அறிவிக்க நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் நேற்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தனர். அதற்கு முன்பாக மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு சென்று வணங்கினர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் ஒவ்வொருவராக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மத்திய சென்னையில் வென்ற தயாநிதிமாறன், தூத்துக்குடியில் வென்ற கனிமொழி, தென் சென்னையில் வென்ற தமிழச்சி தங்கபாண்டியன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி, காஞ்சிபுரத்தில் வென்ற செல்வம், திருவண்ணாமலையில் வென்ற அண்ணாத்துரை, அரக்கோணத்தில் வென்ற ஜெகத்ரட்சகன், நீலகிரியில் வென்ற ஆ.ராசா, கள்ளக்குறிச்சியில் வென்ற கவுதம் சிகாமணி மற்றும் மாநிலம் முழுவதும் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன் உள்ளிட்டவர்களும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: