புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது: பேராசிரியர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது என்று பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அவர்கள் நேற்று முதல் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றனர். இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் பேராசிரியர் அன்பழகன் கூறியிருப்பதாவது:

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: