ஸ்டெர்லைட் ஆலையை மூட பணியாற்றுவேன்: கனிமொழி பேட்டி

சென்னை: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தார். அவருக்கு திமுக மகளிரணி மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த வெற்றி திராவிட இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி. கருணாநிதியின் கொள்கை, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி, தமிழக மக்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படும். திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக மக்களின் நன்மைகளுக்காக பணியாற்றுவோம். வடமாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றிருக்கிறது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் திமுக எடுக்கும் என்று ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதன்படி, தூத்துக்குடி மக்களின் குரலாக என்னால் முடிந்த அளவுக்கு அந்த ஆலையை மூட நிச்சயமாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: