மதுரை: பிரிந்து வாழும் மனைவி, என் பிள்ளைகளுக்கு நடத்தும் காதணி விழாவிற்கு என்னைச் சார்ந்த உறவுகள் செய்முறை (மொய்) செய்யாதீர்கள் என்று போஸ்டர் அடித்து ஒட்டி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ள கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டுச் சண்டை தெருவிற்கு வந்திருக்கிறது. மதுரை செல்லூர் மேலத்தொப்பை சேர்ந்த செல்லையா மகன் கர்ணன். இவரது பெயரில் பொது அறிவிப்பு என்கிற போஸ்டர் அடித்து நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘நானும் எனது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம். எனது விருப்பத்திற்கு மாறாக எனது பிள்ளைகளுக்கு காதணி விழா ஏற்பாடு நடக்கிறது. இந்த விழாவுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆகையால் என்னை சார்ந்த உறவுகள் மற்றும் ஏற்கனவே செய்முறை செய்த நபர்கள் யாரும் இந்த காதணி விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவிக்கிறேன்’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.