தீக்குளித்த மனைவி சாவு காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாப பலி

பூந்தமல்லி: போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜி (52), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா (48). இவர்களுக்கு சரவணன் (25), விஜய் (23) என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று வழக்கம்போல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. விரக்தியடைந்த சித்ரா, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது. தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதும் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜி, தீயை அணைத்து மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீ பரவியது.  பலத்த தீக்காயம் அடைந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: