காரைக்குடி: காரைக்குடியில் இருந்து இரவு 12.30 மணிக்கு மேல் எந்த ஊருக்கும் செல்ல பஸ் இல்லாததால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் 4 மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க இரவு நேர பஸ் சர்வீஸ் தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளதால் இப்பகுதி மாவட்டத்தில் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. தவிர இங்குள்ள ஆன்மீக தலங்கள் மற்றும் அரண்மனை போன்ற வீடுகளை பார்வையிட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் வந்த செல்கின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கிருந்து மதுரை, கோவை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, பழனி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படுகிறது. இப்பஸ் வசதி அதிகாலை 3 மணிக்கு துவங்கி இரவு 12.30 வரை மட்டும் இயக்கப்படுகிறது.