பெங்களூரு: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர் கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியநிலை ஏற்படும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில், பாஜ 23 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். இதை தொடர்ந்து, மஜத-காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்படும். காங்கிரசார் மஜதவுக்கு அளித்து வரும் ஆதரவை நாளை திரும்பப் பெறுவார்கள். இதன் பின்னர், அதே நாளில் முதல்வர் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்வது உறுதி. எனவே பாஜ ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் முதல்வர் குமாரசாமி ஆகிய இருவரும் ஒரே மனநிலையை கொண்டவர்கள். மக்களவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோற்பது எவ்வளவு உறுதியோ அதேபோல கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி வேட்பாளர்கள் பெரும் அளவில் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டது.