புதிய எம்பிக்களுக்கு தங்குமிடம் எங்கே?

புதுடெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு வரும் எம்பிக்களுக்கு அரசு விடுதிகள், இல்லங்களில் தங்க ஏற்பாடு செய்யப்படும் என மக்களவை செகரட்டரி ஜெனரல் ஸ்நேகலதா வஸ்தவா கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதில் வெற்றி பெறும் எம்பிக்கள் நாளை முதல் டெல்லிக்கு வர தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, தேர்தலில் வெற்றி பெற்றதும் டெல்லி வரும் எம்பிக்கள்  ஓட்டல்களில் தங்கிவிட்டு அரசிடம் பில் தொகையை வாங்கிக் கொள்கின்றனர். இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

 இதை தவிர்க்க, இந்த முறை தேர்வு செய்யப்படும் எம்பிக்களுக்கு, அவர்களுக்கான இல்லங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் வரை அரசு விடுதிகள், விருந்தினர் மாளிகை போன்றவற்றில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதாவது மாநில அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை, விடுதிகள், வெஸ்டர்ன் கோர்ட் ஆகிய இடங்களிலும் அதை ஒட்டிய கட்டிடங்களிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மக்களவை செகரட்டரி ஜெனரல் ஸ்நேகலதா  வஸ்தவா தெரிவித்தார்.

Related Stories: