சென்னை: சென்னையை சேர்ந்த 5வயது சிறுமி லோகிதா, வங்காள விரிகுடா கடலில் 5 கி.மீ நீந்தி சாதனை படைத்துள்ளார்.சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றுபவர் மகிமைதாஸ். நீச்சல் வீரரான இவர் தமிழக காவல்துறைக்காக தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரது 2வது மகள் லோகிதா சராக்ஷி (5). தந்தையுடன் நீச்சல் பயிற்சியை காண சென்ற லோகிதாவுக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டு 3வயதுக்குள் நீச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டார். லோகிதா ஆர்வத்தை பார்த்த நீச்சல் பயிற்சியாளர் கே.எஸ்.இளங்கோவன் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில், சென்னை அடையாறு முகத்துவாரம் அருகேயிருந்து மெரீனா கண்ணகி சிலை வரை 5 கி.மீ தூரத்துக்கு சுமார் ஒரு மணி 45 நிமிடங்களுக்குள் நீந்தி சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சிறுமி லோகிதாவை பாராட்டி பரிசளித்தார். இந்த சாதனை குறித்து மகிமைதாஸ் கூறும்போது, ‘நீச்சலில் எனது மகளுக்கு ஆர்வம் அதிகம். அதன் தொடர்ச்சியாக அதிக தூரத்துக்கு நீந்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். எதிர்காலத்தில் கடலில் 10 - 15 கி.மீ நீந்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.