சேலத்தில் பட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடிய 3 வயது குழந்தையை ஸ்கூட்டரில் கடத்திய பெண்கள்: 10 கிலோ மீட்டர் தொலைவில் விட்டுச்சென்றனர், சிசிடிவி கேமரா பதிவு மூலம் விசாரணை

சேலம்: சேலத்தில் நேற்று பட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த  வயது ஆண் குழந்தையை முகத்தை மறைத்தபடி வந்த 2 பெண்கள் ஸ்கூட்டரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் அரிசிபாளையம் தம்மண்ணன் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (30). கார்பெண்டர். இவரது மனைவி நித்யா (27). இவர்களுக்கு பரணிதரன் (5), யோகேஸ்வரன்(3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நேற்று காலை சுமார் 11 மணியளவில் யோகேஸ்வரன், அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, பரணிதரனை நித்யா வீட்டிற்குள் குளிக்க வைத்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த யோகேஸ்வரனை காணவில்லை. எங்குதேடியும் குழந்தையை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 15க்கும் மேற்பட்டோர் அருணகிரி பஸ் நிறுத்தம் அருகே குழந்தையை கண்டுபிடிக்கக்கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,``காலை 11 மணியளவில் ஒரு பைக்கில் துப்பட்டாவால் முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு 2 பெண்கள் வந்தனர். அவர்கள் தான் குழந்தை யோகேஸ்வரனை கடத்தி சென்றனர். இப்பகுதியில் உள்ள பெரிய கட்டிடங்கள் மற்றும் கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தால் குழந்தையை கடத்தி சென்றது யார் என்பது தெரியும்’’ என்றனர். இதைதொடர்ந்து சேலம் மாநகர துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் அந்த சிசிடிவி கேமராக்களில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு சிசிடிவி கேமராவில், ஸ்கூட்டரில் வந்த இரண்டு பெண்களும் முகத்தை துப்பட்டாவில் மூடியபடி வந்து குழந்தை அருகே வாகனத்தை நிறுத்துகின்றனர். பின்னால் அமர்ந்து இருப்பவர் இறங்கி குழந்தையை தூக்கிக்கொண்டு ஸ்கூட்டரின் நடுவில் அமர வைத்து அங்கிருந்து வேகமாக செல்வது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து சேலம் மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தையை சேலத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்தர்கோயில் ரோடு, சேலத்தாம்பட்டியில் நேற்று மதியம் சாலையோரம் விட்டுவிட்டு, கடத்தல்காரிகள் தப்பி விட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில், குழந்தையை மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வடமாநிலத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்தில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது குழந்தையை கடத்தி சென்றார்களா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: