பலியானவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை: எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில் முறையான விசாரணை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை, பலியானவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த நூறாவது நாள் போராட்ட ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியாகி இன்றுடன் ஓராண்டு முடிந்து உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில் முறையான விசாரணை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. அந்த குடும்பத்திற்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அரசு விரைவான முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: