1500 ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு: பயிற்சி அளிப்போர் சரியில்லையா?

சென்னை: தகுதித் தேர்வுக் கட்டாயத்தில் சிக்கியுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திறனற்றவர்களை நியமித்துள்ளதால் பயிற்சி பெறுவதில் சிக்கல் உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். அரசு மற்றும் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2011ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பணியமர்த்தப்பட்டனர். தற்ேபாது 8 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த ஆசிரியர்களில் 1500 பேர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இதனால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம்கூட, 1500 ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இதுபோல பல வாய்ப்புகள் அந்த ஆசிரியர்களுகஅக வழங்கப்பட்டது. தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கும் தகுதித் தேர்வில் இவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் பணியிழக்கும் நிலை ஏற்படலாம். இந்நிலையில், ஜூன் மாதம் 8, 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வில் மேற்கண்ட ஆசிரியர்கள் பங்கேற்க வசதியாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள் திறனற்றவர்களாக இருக்கின்றனர் என்று மேற்கண்ட 1500 ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்ததாவது: எங்களுக்கான டெட் பயிற்சி வகுப்புகள் அவசரகதியில் தொடங்கப்பட்டுள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் கருத்தாளர்களே பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதித் தேர்வுக்கான பாடத்திட்ட புத்தகங்கள் தமிழ்நாடு பாடத்திட்ட புத்தகங்கள் மற்றும் உளவியல் என மொத்தம் 700 யூனிட்டுகள் உள்ளன. அவற்றை 10 நாட்களில் முடிக்கமுடியாது. அதற்கேற்ப திறன்மிக்க பயிற்றுநர்கள் நியமிக்கவில்லை என்பது பெருங்குறையாக உள்ளது. பெயரளவுக்கு இந்த பயிற்சியை நடத்துகின்றனர். உளவியல் தவிர மொழிப்பாடங்கள் மற்றும் முதன்மைப்பாடங்கள் நடத்த திறமையான பயிற்றுநர்களை நியமித்தால் மட்டுமே பயிற்சி உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: