இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட பிரச்னை பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியாது

சென்னை:  பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று நடந்தது. தேர்தல் நடந்த அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் தொடர்ந்திருந்த வழக்கில்,  தனது வாக்குச்சாவடி பொன்பரப்பியில் அமைந்துள்ளதாகவும் தேர்தல் நாளில் நடந்த வன்முறை காரணமாக தன்னால் வாக்களித்து முடியவில்லை.

எனவே மீண்டும் பொன்பரப்பியில் மறு தேர்தல் நடத்தப்பட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, உரிய ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தை  அணுகும்படி உத்தரவிட்டனர். மேலும்  மறுதேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், இரு பிரிவு மோதலில் வாக்குச்சாவடிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே மறுதேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விஷ்ணுராஜ் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதில், வாக்குப்பதிவு அன்று வன்முறை காரணமாக 275 வாக்காளர்கள் வாக்களிக்காததால் பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இதுதொடர்பான கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. எனவே, இதனை வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை தேர்தல் வழக்கு மூலமாக அணுக அறிவுறுத்தினர்.

Related Stories: