பதிவான வாக்குக்கும் ஒப்புகை சீட்டுக்கும் முரண்பாடு இருந்தால் மறு வாக்குப்பதிவு நடத்த கோரி முறையீடு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டும் எண்ணப்படும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வக்கீல் ஸ்வரூப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று ஆஜராகி, ஒப்புகை சீட்டு என்ணுவதில் பல குறைபாடுகள் உள்ளன. ஒப்புகை சீட்டை எப்படி எண்ணுவது என்பதற்கு விதிகள் எதும் இல்லை. ஒப்புகை சீட்டை எண்ணும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையுடன் வேறுபாடு இருந்தால், அதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.

எனவே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படும் மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட நீதிபதிகள், தேர்தல் முடிந்தவுடனோ அல்லது விடுமுறை காலத்தின் முதல் இரண்டு அமர்வுகளையோ அணுகாமல் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறி வக்கீலின் முறையீட்டை ஏற்க மறுத்தனர்.

Related Stories: