போலி கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனமுடைய வேண்டாம்...: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: போலி கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனமுடைய வேண்டாம் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு  வெளியிடப்பட்டன. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தை பொறுத்த வரை திமுக கூட்டணி 29 அல்லது அதற்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2014ல் 38 தொகுதிகளையும் வென்ற அதிமுக இம்முறை, ஒற்றை இலக்க தொகுதியிலேயே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜ கூட்டணி 58 இடங்களையும், சமாஜ்வாடி - பகுஜன்சமாஜ் கூட்டணி 20 இடங்களையும் வெல்லும் என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 16-20 இடங்கள் கிடைக்க  வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும், அங்கு பாஜ முதல் முறையாக கணக்கை தொடங்கி வரலாறு படைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் பாஜ 18-20 தொகுதிகளை கைப்பற்றும் என  கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜ வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பீகாரில் பாஜ கூட்டணிக்கு 30 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத்தில் பாஜ அமோக வெற்றி பெறும் என்றே கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலி கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனமுடைய வேண்டாம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் உஷாராகவும், கண்காணிப்புடனும் இருங்கள். பயம் அடைய வேண்டாம். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். போலியான கருத்துக்கணிப்பு பிரசாரத்தினால் நீங்கள் மனம் உடைய வேண்டாம். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடினமான உழைப்பு வீண் போகாது, என காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: