புதுடெல்லி: தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக கூறி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கினை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் துப்பாக்கிச்சூடு அடுத்த சில தினங்களுக்கு தூத்துக்குடியில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.