புதுடெல்லி: தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்குள் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதி வாரத்தில் துவங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான சாதக சூழலானது இந்த மாதம் 19, 20 தேதிகளில் தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சாதக சூழலிலும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 தினங்களில் தெற்கு அந்தமான் கடற்பகுதியிலும், தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழைக்கான சாதக சூழல் ஏற்படும். அதன் பிறகு 10 நாட்கள் கழித்து அதாவது ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையின் போது கேரள மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகமாக மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.