தஞ்சை: அயோத்தியாபட்டி பகுதியில் விளைநிலங்களில் எண்ணெய்க்குழாய் பாதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி துவாக்குடி அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கிற்கு குழாய்கள் வழியாக எண்ணெய் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கும் பணி பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அயோத்தியாபட்டி பகுதியில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என கூறி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயிகளை பாதிப்பும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது என்றும், ரத்து செய்ய கோரி போராடி வருகின்றனர். இன்றைய போராட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர. புதுச்சேரியில் நிலத்தடி நீரை நம்பி மட்டும் தான் விவசாயம் இருக்கிறது என்று விவசாயிகள் கூறியுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயிகளின் வாழவாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். உயிரை கொடுத்தாவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று நாகை அருகே குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேளாங்கண்ணி அருகே மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். காவிரி டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில் கடற்கரையோர கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்த வேதாந்தா குழுமத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.