மே 22 - இன்று உலக பல்லுயிர் பெருக்க தினம் : இயற்கையோடு இணைந்து வாழ்வோம்...

மனிதன் உயிர் வாழ தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், இதமான சூழல் இவையெல்லாம் மிகவும் அவசியம். இல்லையா...? ஒரு விஐபி மரக்கன்றை நடுகிறார். அது படம் பிடிக்கப்படுகிறது. விளம்பரப்படுத்தப்படுகிறது. அதே நேரம், ஒரு சிட்டுக்குருவி பழத்தை கொறிக்கிறது. விதையை தூவி செல்கிறது. விதை செடியாகி, மரமாகி வளர்கிறது. இதுவும் தன்னையறியாமல் மரங்களை வளர்த்து வருகிறது. விளம்பரப்படுத்தப்படாமல் செய்யும் இந்த உதவிக்கு நாம் செய்த கைமாறு என்ன?

ஒரு மரம் நமக்கு என்ன தருகிறது? நாம் வெளியிடும் கார்பன் - டை - ஆக்சைடை உட்கிரகித்து, ஆக்ஸிஜனை தந்து நம்மை வாழ வைக்கிறது. மரங்கள் சூழ வாழும் ஒரு மனிதன் தனது வாழ்நாளில், ஆஸ்பத்திரிக்கு செல்லும் செலவை பாதியாக குறைக்கிறான். இது விஞ்ஞானம் அல்ல.. விவசாயம். இதைத்தானே நாம் அழித்துக் கொண்டிருக்கிறறோம். விவசாயிகள் போராடுவது தங்களின் வாழ்வாதாரத்துக்காக மட்டுமல்ல... நமது வாழ்க்கையும் இணைந்து இயங்குவது அவர்களால்தான் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்டது பல்லாயிரக்கணக்கான மரங்கள் மட்டுமல்ல... தூய்மையான காற்றையும்தான். அக்னி வெயிலில் உடல் நோகிறோமே... இதற்கு காரணம் என்ன? பல கோடி மரங்களை அழித்து புவி வெப்பமயமாதலை உருவாக்கி விட்டோம். வரத்து கால்வாய், கண்மாய், ஏரி என நீர்நிலைகளை அழித்து உயர்ந்து நிற்கிறது பல அடுக்கு மாடி கட்டிடங்கள். நீர்நிலைகளை தேடி வந்து அமர்ந்த பறவைகள் எங்கே? சர்வசாதாரணமாக நம் முன்னே சுற்றித்திரிந்த சிட்டுக்குருவிகள் எங்கே மாயமாகி போயின? அரிதான பறவையாக சிட்டுக்குருவி ஆனது எப்படி? காடுகளில் சுற்றித்திரிந்த விலங்குகள் குடிநீர் தேடி நகரங்களுக்கு ஓடி வருவது ஏன்?

நமது வேகமான வாழ்க்கைக்கு அவசியமானது என்று கூறி, இயற்கையை அழித்து வாழப் பழகி விட்டோம். நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமா? இந்த உலகம் செடி, கொடி, மரம் உள்ளிட்ட தாவர இனங்களுக்கும், பூச்சிகள், பறவைகள், விலங்குகளுக்கும் சொந்தமானது. அவைகளுக்கு உரிமை உள்ள இடத்தில் நாம் வாழ்வது தவறு அல்லவா? இதை மனிதர்களாகிய நாம் உணர வேண்டும் என்பதற்காக உருவானதுதான் உலக பல்லுயிர் பெருக்க தினம். இதைத்தான் ஆண்டுதோறும் மே 22ம் தேதி கொண்டாடி வருகிறோம்.

உயிரினங்கள் மட்டுமல்ல... காடுகளையும், மனதை கவரும் மலைகளையும், அங்கு வளரும் அரிய வகை மரங்களையும் நாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும். காடுகளே உயிரினங்களில் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரிதும் காரணமாக இருக்கின்றன. இன்றைய உலகில் 300க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் அழிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கைச்சூழல் கெடுவதே இதற்கு காரணமாகும். இனியாவது, நமக்கு மட்டுமல்ல... நம்மை சுற்றி வாழும் ஜீவராசிகள், மரங்களுக்கும் சேர்த்துத்தான் இந்த உலகம் என்பதை இனியாவது உணருவோமாக...!

Related Stories: