×

மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்காவிட்டால் அதிமுக அரசு தலைகவிழ்ந்து விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்காவிட்டால் அதிமுக அரசு விவசாயிகளிடம் தலைகவிழ்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
 
பல்லும், ‘பவரும்’ இல்லாத வெறும் கூடு போன்றதொரு ஆணையத்தை அமைக்க மத்தியில் உள்ள பா.ஜ. அரசுக்கு அனுசரணையாக இருந்த அதிமுக அரசு, இன்றுவரை அந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டுவதற்கோ உரிய தண்ணீரைப் பெறுவதற்கோ, டெல்டா விவசாயிகளின் உயிர் காக்கும் விவசாயத் தொழிலை காப்பாற்றிடும் நோக்கில் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது மிகுந்த கவலை தரும் செய்தியாகும்.

உச்ச நீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதி வரைவுத்திட்டத்தின்படி, ஜூன் முதல் நாள் நீராண்டின் துவக்கம். ஜூன் மாதத்திலிருந்து வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த அறிக்கையை முன்கூட்டியே காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிடம் தமிழக அரசு கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லை.

‘‘திருத்தப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குரிய 177.25 டி.எம்.சி நீரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டி.எம்.சி. வீதம் விடுவிக்க வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்யும்’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவினை காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்து விட்டதா? அதற்கும் பதில் இல்லை.

ஆகவே காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு- மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே சென்று தரைதட்டி விட்டதாகச் செய்திகள் வருவதால் - கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரையிலும், இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையிலும் தமிழகத்திற்கு நடுவர் மன்ற உத்தரவின்படி வர வேண்டிய காவிரி நீர் கிடைத்ததா? அதில் எவ்வளவு பற்றாக்குறை? அந்தப் பற்றாக்குறையைப் பெற அதிமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது பற்றியெல்லாம் எந்த தகவலும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி இதுவரை வெளியிடப்படாதது மிகவும் வருந்தத்தக்கது.

ஆகவே, தன் கட்டுப்பாட்டிலேயே நீர் வளத்துறையையும் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் மெத்தனமாகவும், மேம்போக்காகவும் இருந்துவிட்டார். அ.தி.மு.க அரசின் இந்தப் படுதோல்வியால் இந்த வருடம் மட்டுமின்றி - கடந்த எட்டு வருடங்களாகவே மேட்டூர் அணையை காவிரி நீர் பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி திறக்க முடியாத அவல நிலைமை அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் வற்றி, விவசாயிகள் தாங்கமுடியாத துயரத்தில் தள்ளப்பட்டு - விழி பிதுங்கி நிற்கும் வேதனை கப்பிய சூழல் அ.தி.மு.க அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
‘‘வெறும் 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தை கூட்டலாம்’’ என்று காவிரி இறுதி வரைவுத் திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்கு, துறை அமைச்சர் என்ற முறையில் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும்.

அப்படி முடியவில்லை என்றால், அதிமுக அரசு தலை கவிழ்த்து தனது கையாலாகாத் தனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, டெல்டா விவசாயிகளிடம் தனது கையை விரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். பல்லும், ‘பவரும்’ இல்லாத வெறும் கூடு போன்றதொரு ஆணையத்தை அமைக்க மத்தியில் உள்ள பா.ஜ. அரசுக்கு அதிமுக அனுசரணையாக உள்ளது.

Tags : dam ,Mettur ,government ,AIADMK ,Stalin ,Tamil Nadu , Mettur dam, opened , June 12, AIADMK government, farmers, apologize, Stalin, emphasize
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி