கருப்பு பண சட்டம் தொடர்பான ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: ‘கருப்பு பண சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது’ என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. வெளிநாட்டு வருமானம், சொத்து தொடர்பான கருப்பு பண சட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரலில் மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தவும் உத்தரவிட்டது.  இதை பயன்படுத்தி  ₹3,600 கோடி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புடைய கவுதம் கேதான் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்துவதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேதான் வழக்கு தொடர்ந்தார். இதை கடந்த மே 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள், கருப்பு பண சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கு கோடைக்கால நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும், மத்திய அரசின் மனுவுக்கு 6 வாரத்தில் பதில் அளிக்கும்படி கேதானுக்கும் உத்தரவிட்டனர்.

Related Stories: