வடமாநில ஆர்டர்கள் குவிந்ததால் சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி தீவிரம்

சிவகாசி: வட மாநில ஆர்டர்கள் குவிந்துள்ளதால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி  தீவிரமடைந்துள்ளது. கோடை வெயில் நிலவி வருவதால் விபத்து ஏற்படுவதை தடுக்க வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆலைகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சரவெடி, சங்கு சக்கரம், புஸ்வாணம், பேன்சி ரக வெடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டாசு உற்பத்தி  பணிகளில் நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் தீபாவளி பண்டிகைக்காக விற்பனை செய்யப்படுகின்றன.  

 பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி, அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்தார். பட்டாசு விற்பனைக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்கவும்,  பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் மூன்று மாதங்கள்  பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டது.  தொழிலாளர்கள் வேலையின்றி  பரிதவித்தனர். மாநில அரசு உறுதி அளித்ததன் பேரில் மீண்டும் பட்டாசு ஆலைகள் செயல்பட துவங்கின. தற்போது வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்துள்ளதால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி தீவிரமாக நடைபெறுகிறது.

 நாளுக்கு நாள் தட்டுப்பாடு அதிகாித்து கொண்டே செல்வதால் 10 முதல் 15 சதவீதம் வரை பட்டாசு விலையை  உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கடும் கோடை வெயில் நிலவி வருகிறது. இது பட்டாசு உற்பத்தி செய்ய உகந்த சூழல் என்றாலும், சிறிது கவனம் சிதறினாலும் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த வாரம் 3க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெயில்  மற்றும் மின்னல் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் 3 பேர் வரை உயிரிழந்தனர். வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். காலை 11 மணிக்குள் கெமிக்கல்  கலவை பணியை முடிக்க வேண்டும். அதிக ஆட்களை கொண்டு பணி செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். விபத்துகளை தடுக்க வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆலைகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சிவகாசி பகுதி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: