டெல்லி: நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி அந்நிறுவன ஊழியர்கள், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குத்தகை பாக்கி, கடன் சுமை, ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை, முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் 16 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
மேலும் 22 ஆயிரம் பேர் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேலை இழந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என கூறுகின்றனர். தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் டெல்லியில் உள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு அந்நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண் விமானிகள், பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.