* கலெக்டர் நடவடிக்கை
தேன்கனிக்கோட்டை : தளி அருகே உள்ள நூறாண்டு கடந்த பயணிகள் நிழற்கூடம் சிதிலமடைந்துள்ளதை, சமூக வலைதளங்களில் பதிவிட்ட 3 மணி நேரத்தில் நிழற்கூடத்தை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். தளி அருகே தேவகானப்பள்ளி கிராமத்தில், கற்களால் கட்டப்பட்ட நூறாண்டு பழமையான நிழற்கூடம் உள்ளது. தற்போது, சிதிலமடைந்து காணப்படும் இந்த நிழற்கூடத்தை சீர்செய்யகோரி அறம் வரலாற்று மையம் சார்பில் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.
பதிவிட்ட 3 மணி நேரத்தில், இதனையறிந்த கலெக்டர் பிரபாகர், உடனடியாக தளி வட்டார வளர்ச்சி அதிகாரிகளை அழைத்து, நிழற்கூடத்தை சீரமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசசேகர், நேற்று காலை அதிகாரிகளுடன் சென்று நிழற்கூடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, துப்புரவு பணியாளர்களை கொண்டு நிழற்கூடத்தை தூய்மைப்படுத்தும் பணியை முடுக்கி விட்டார். நிழற்கூடம் சீரமைக்கப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.