சென்னை: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு தினம் மதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் மே 18ம் தேதி அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் இலைகை போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கவிஞர் காசி அனந்தன் ஆகியோர் போரில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு செய்தயாளர் சந்திப்பின் போது பேசிய மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமுருகன் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.