உபி தேர்தலில் பாஜவை விமர்சித்ததால் ராஜ்பரின் அமைச்சர் பதவி பறிப்பு: உடனடியாக ஆளுநர் ஒப்புதல்

லக்னோ: பாஜவை கடுமையாக விமர்சித்து வந்த ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பரிந்துரையை ஆளுநர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜ கூட்டணியில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) இடம் பெற்றுள்ளது. 2017 சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இம்முறை மக்களவை தேர்தலில் போட்டியிட எஸ்பிஎஸ்பி கட்சி ஒரு சீட் கேட்டது. இதற்கு பாஜ மறுப்பு தெரிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ்பர், சில தொகுதிகளில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியும், சில தொகுதிகளில், காங்கிரஸ் மற்றும் பகுஜன்சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தில், ‘‘ஓட்டு கேட்டு வரும் பாஜவினரை செருப்பால் அடியுங்கள்’’ என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவரே இவ்வாறு பேசியது பாஜவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளான நேற்று, ராஜ்பரை அமைச்சரவையிலிருந்து நீக்க உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஆளுநர் உடனடியாக ஏற்றுக் கொண்டு, ராஜ்பரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். பாஜவுக்கு எதிராக பேசிய கூட்டணி கட்சி தலைவரின் அமைச்சர் பதவியை பாஜ பறித்திருக்கும் சம்பவம் உபி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவரே இவ்வாறு பேசியது பாஜவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

20 நாட்கள் முன்பே நீக்கியிருக்கலாமே:

பதவி பறிக்கப்பட்டது குறித்து ராஜ்பர் கூறுகையில், ‘‘இந்த முடிவை வரவேற்கிறேன். ஆனாலும் இது தாமதமான முடிவு. 20 நாட்கள் முன்பே இம்முடிவை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதன் மூலம், முதல்வர் யோகி, என்னுடன் போரிட தயாராக இல்லை என்பதை நிரூபித்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு சீட் தான் கேட்டோம். நாங்களும் ஒரு கட்சிதான். நாங்கள் போட்டியிடாவிட்டால், கட்சி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் எந்த விஷயத்தை எங்களால் கொண்டு செல்ல முடியும்?’’ என்றார். ‘‘அடுத்தாக பகுஜன்சமாஜ் - சமாஜ்வாடி மெகா கூட்டணியில் சேரப்போகிறீர்களா?’’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தனியாகவே பிறந்தேன். தனியாகவே நடந்தேன். இப்போதைக்கு பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் முடிவெடுப்போம்’’ என்றார்.

Related Stories: