கோயில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன் கைது

முசாபர் நகர்: உத்தரப் பிரதேசத்தில் செல்போன் வாங்குவதற்காக 16 வயது சிறுவன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் உள்ள தனபவான் பகுதியில் அனுமான் கோயில் உள்ளது. இங்கு ஏராளமான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூசாரி கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

நிர்வாகத்தினர் திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் 16 வயது சிறுவன் ஒருவன் உண்டியலில் இருந்த பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் வாங்குவதற்காக கோயில் உண்டியலில் உள்ள பணத்தை திருடியதாக அந்த சிறுவன் தெரிவித்தான்.

Related Stories: